14. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
இன்றும் ஒரு வரியை தவற விட்டேன்.
சிந்தனை தெறித்துக் கொண்டு வேகமாக முன்னால் ஓட,
மெதுவாக பொறுக்கியபடி
நடக்கிறது நினைவு.
தவற விட்ட வரியை தேடுகிறேன்.
மேலெழுந்து வரவில்லை.
நினைவில் உள்ளதா இல்லையா எப்படி சரி பார்ப்பேன்?
என்றாவது வருமா?
வராமலே போகுமா?
சிந்தனைக்குக் கூர் பெருகுகிறது.
நினைவு மழுங்கிக் கொண்டே போகிறது.
ஒரு வழியாய் நேற்றுத்
தவற விட்ட வரியை கண்டறிந்தேன்.
எனக்கு வயதாகிறது.

Comments
Post a Comment