இரண்டே நாட்களில் பூக்குழி நாவலை வாசிக்க முடிந்தது. அளவில் சிறிய நாவல். கதையும் சிறியதே. நீட்டி எழுதப்பட்ட சிறுகதை போலவே உள்ளம் உணர்ந்தது. இதற்கு முன் மாதொரு பாகன் மட்டுமே வாசித்திருக்க, இந்நாவலை இந்த வாரம் வாசிக்கத் தொடங்கினேன். ஆணவப் படுகொலை நடக்கும் மேற்கு மாவட்டங்களில், ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. குமரேசன், வேற்று சாதியைச் சார்ந்த சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழைத்து வருகிறான். தினமும் நெல்லாஞ்சோறு சாப்பிடக் கூட வழியில்லாத கூரை வீடுகளில் வாழும் மனிதர் மனங்களில் சொந்த சாதிப் பெருமை கோபுரம் கட்டிப் பாதுகாப்பாய் வாழ்கிறது. தாய், மாமன்கள், அப்புச்சி என எல்லாரும் சரோஜாவை வெறுப்பால் விரட்டுகிறார்கள். சிறிய டவுனில் சந்தோசமாய் வாழ்ந்தவள் இந்த பாறைக்களத்தில் குமைந்து, நசிந்து குமரேசன் அன்பை மட்டுமே பிடித்துக் கொள்கிறாள். திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர் கூட்டத்தில் குமரேசன் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறார்கள். சரோஜாவின் சாதியையும் தெரிந்து கொள்கிறார்கள். திருவிழாவிற்கு முன் ஊரை சுத்தப்படுத்தி விட வேண்டுமென சரோஜாவை கொல்வதற்கு முடிவெடுக்கப்படுகிறது. சோடா கடை போடுவது தொடர்பா...
மனம் வெறுமையாய் இருக்கும்போது அவ்வப்போது காவேரி ஆற்றின் கரையில் நிற்பதுண்டு. எதிரே அம்மா மண்டபம் படித்துறை தெரிய, இரண்டு கரைகளுக்கும் நடுவில் மணல் பெருகி, மின்னிக்கொண்டு கிடந்தது. ஊடே கோரையும் அதன் தலையில் வெள்ளை நிறப் பூக்களும். ஆற்றின் நடுவில் நீரேற்றும் நிலையத்தை சுற்றிக் கொண்டு தண்ணீர் கொஞ்சமாய் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் தூங்குமூஞ்சி மரமும் அருகில் அடர்த்தியாய் மாமரமொன்றும் நின்று கொண்டிருந்தன. மாமரம் பிஞ்சுகளால் நிறைந்து கிடந்தது. காற்றில் சேர்ந்தாற்போல் கிளையில் பிஞ்சுகள் அசைவது அழகாய் இருந்தது, சிறு குழந்தைகள் ஒன்றாய் கைகோர்த்துக் கொண்டு ஆடுவது போல. தவிட்டுக் குருவிகள் சிலவும், அணில்களும் கிளைகளுக்கிடையே தாவிக் கொண்டிருக்க, அவைகளின் ஒலிகளுக்கிடையே இதுவரை கேட்காத பறவை ஒன்றின் ஓசை மெல்லியதாய் கேட்டது. அருகிலிருந்த தூங்குமூஞ்சி மரத்திலிருந்து அணில்கள் மாமரத்திற்கு குதித்து இலைகளை அசைத்துக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டுமிருக்க, அப்பறவையின் ஒலியைக் கொண்டு இருக்குமிடத்தை அறிய முடியவில்லை. சிறிது நேரம் உற்றுக் கவனித்ததில் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் தென்பட்...
சமயபுரம் டோல்கேட்டில், காலை 6.50 க்கு பஸ். எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் கொள்ளிடம் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருந்தேன். பாலத்தின் இரு புறமும் பிரம்மாண்ட ஓர வளைவுகள், தூண்களோடு வேகமாகக் கடந்து சென்றன. கீழே காவிரியின் உபரி நீரை முக்கொம்பு மேலணையில், கொள்ளிடத்தில் திருப்பி விட்டதால், இரு கரையும் நிறைத்து, ஒரு பழுப்பு நிற யானையைப் போல, மெல்ல அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது. மென் தூறலும், ஈரமும் துணையாக வர, சில்லென்று வீசும் ஈரக்காற்றில் அவசரக் குளியலின் ஈரம் காய்ந்தது. வண்டியை ஸ்டாண்டில் விட்டு, எடை மிகுந்த பேரங்காடி பையுடன் நிறுத்தத்தை அடைந்தேன். முதுகில் ஒரு பை. அங்கேயே உள்ள பூக்கடையில் பொன்னிறத்தில் மாலைகள், ரோஜா மலர்கள் கலந்து கட்டி தொங்கிக் கொண்டிருந்தது. தேனீக்கள் பறந்து பறந்து ரோஜாக்களை முட்டிக் கொண்டிருந்தன. அவைகளின் முதுகில் மஞ்சள் நிற துகள்கள். பூக்கடைக்காரரின் கைகள் இயந்திர வேகத்துடன், ஒழுங்குடன் மலர்களை கட்டிக் கொண்டிருக்க, சுவாரஸ்யமாக அருகில் பேசிக் கொண்டிருந்தார். பின்னணியில் புத்தம் புது காலை..., பொன்னிற வேளை.., பண்பலையில் பாடல் தேர்வு செய்பவர்கள் ரசனையுள்ளவர்கள்...
Comments
Post a Comment