17. தினமும் தோன்றுவதில்லை வானவில்.
இலைப் பறவை. இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. பறவைகள் வருவது குறைந்து விட்டது. மரங்கள் தனிமையை உணரும் கோடை. நிழலின் பரப்புக் குறைய மரத்தினடியில் ஊறும் எறும்புகள், பூச்சிகளை காணவில்லை. ஈரம் காய்ந்து நகரும் புழுக்களை விரட்டிவிட்டது. அணில்களின் கீச்சொலி, வாலை அடிக்கும் துள்ளல்கள் இல்லை. அனல் காற்று வீசுகையில் இலைகள் தரையிலிருந்து எழும்பி சிறகை விரிக்கின்றன. ஒவ்வொரு மரத்திலிருந்தும் பழுப்பு நிற, சிவப்பு நிற, மஞ்சள் நிற இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட நாள் தங்கியதால் அலுப்படைந்தது போல இலைகள் எழுந்து பறந்து செல்கின்றன மரத்திலிருந்து. தரையில் காய்ந்த இலைகள் மரத்தை நோக்கி தவம் புரிகின்றன. ஒரே இடத்தில் மூன்று மணி நேரங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்து, இலைகளை உதிர்க்கும் பருவத்தில் இருக்கும் மரத்தை கம்பிகள் போட்ட பெரிய சன்னல் வழியே பார்த்துக் கொண்டே இருக்கும் வாய்ப்பு, மனதில் பல திறப்புகளைத் தருகிறது. அந்த மரத்தை நான் உற்று நோக்குவது அதற்கு தெரிகிறதா? என்னை அதுவும் பார்த்துக் கொண்டிருக்கிறதா? அனல் பறக்கும் பகல் பொழுதில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உதிர்த்துக் கொண்டிருக்கும் மர...

Comments
Post a Comment